செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் காவிக்கொடி பறக்கும்- கோவையில் முழங்கிய தமிழிசை, பொன்னார்!
கோவை: பாஜக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி காவிப்படை சகோதரர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மோடி செல்லவேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்துள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழக அரசியல் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கடந்த சில வாரங்களாகவே பாஜகவினர் கூறி வந்தனர். மோடியின் வருகை புயலை கிளப்பும் என்றும் தெரிவித்து வந்தார் மாநில தலைவர் தமிழிசை. மோடியின் வருகையால் கோவை மாநகரமே 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பிற்பகலில் கோவை வந்த மோடி சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.

520 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனையை திறந்து வந்த அவர் அதனை தமிழகத்திற்கு அர்பணித்து பேசினார். மோடிக்கு முன்பாக பேசிய பொன். ராதகிருஷ்ணன், அரசியல் பேசாமல் பொதுவாகவே பேசி முடித்தார்.
இதனைத் தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்தார் மோடி. காணும் இடமெங்கும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அதே உற்சாகத்துடனேயே முதலில் மைக் பிடித்த தமிழிசை சவுந்தராஜன், டெல்லி செங்கோட்டையைப் போல செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் காவிக்கொடி பறக்கும் என்றும் கூறினார். காவிப்படை சகோதரர்களை இனி அடக்கமுடியாது என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது என்று கூறிய தமிழிசை, பாஜக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என்று உற்சாகத்தோடு பேசினார்.
மோடி அரசு சாதனை
தமிழிசையைத் தொடர்ந்து பேசிய பொன். ராதாகிருஷ்ணன், மோடி அரசு மகத்தான பல சாதனைகளை புரிந்துள்ளது என்றார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு ஏற்பவே மோடி வெளிநாடு பயணம் செல்கிறார். உலகம் முழுவதும் பிரதமர் மோடி பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுக்கூட்டத்தைப் பார்க்க பார்க்க உற்சாகம் கிளம்பவே, தொடர்ந்து பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து தர வேண்டும் என்று கூறியவர் நமது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு உரிமை கொடு என இலங்கை மைய மண்டபத்தில் நின்று பேசியவர் என் தலைவன் மோடி என்றார். இந்தியா முழுவதிலுமுள்ள பள்ளிகளில் திருவள்ளுவர் பாடலை பாடச் செய்தது மோடி அரசு. இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களை மோடி மீட்டு கொண்டுவந்தார் என்றும் கூறினார்.
மேடையில் பேசிய தமிழிசையோ, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ தமிழக அரசை விமர்சிக்கவே இல்லை. இது பாஜக தொண்டர்களை சற்றே யோசிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications