அட நடந்தது தேர்தலே இல்லைங்க.. மீண்டும் மீண்டும் கூறும் தமிழிசை
தினகரன் வெற்றி பற்றி பாஜகவுக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ள தமிழிசை, நடந்தது தேர்தலே இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை: சிறையில் உள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வெற்றியை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பாஜகவுக்கு தினகரனின் வெற்றி குறித்து கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் தேர்தல் என்பது ஒரு குறியீடு அல்ல, அந்த தேர்தல் முடிவை வைத்து பாஜகவை எடைப்போட வேண்டிய அவசியமில்லை. மேலும் தினகரனின் வெற்றி தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
சிறையில் உள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வெற்றி பெரிதுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தலே இல்லை. முன்பெல்லாம் தேர்தலுக்கு முன் பணம் கிடைக்கும் ஆனால் இப்போது தேர்தல் முடிவுக்கு பின்னும் பணம் கிடைக்கிறது.
பல மாநிலங்களில் பாஜக வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. பாஜகவுக்கு தமிழகம் வாக்களித்தால் பல நல்ல முன்னேற்றங்களை காண முடியும், விரைவில் இந்த உண்மை தமிழக மக்கள் உணர்வார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.