முதல்வர் ஆகலாம் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது - தமிழிசை தடாலடி!
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகலாம் என்று நினைக்கும் கனவு பலிக்காது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மதுரை : தமிழகத்தில் 3 மாதத்தில் பாஜக பலம் பெறும் என்று அந்த கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தமிழிசை அளித்த பதில்கள்:
சென்னையில் தொடர்ந்து போதை பொருள் பிடிபட்டு வருகிறது.தலைநகரான சென்னை போதை நகரமாகியுள்ளது . சென்னையில் போதை சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்தனர் , அதனை தடுக்க இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சென்னை புழல் சிறையில் பாக்கிஸ்தான் கொடி தூக்கி வீசப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவது குறித்து புகார் அளித்தும் ,மதுரை காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்கட்சியான திமுக ஒரு வீடியோவை வைத்து கொண்டு தினமும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறது. திமுகவே ஊழல் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளது . அதனால் ஊழலை பற்றி பேச திமுகவிற்கு உரிமையில்லை.
3 மாதத்தில் பாஜக தமிழகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பலம் பெற்று விளங்கும். அந்த பலம் நேரடியாக இருக்குமே தவிர மறைமுகமாக பலத்தை நிருபிக்க மாட்டோம். அதே போன்று நாங்கள் பிற காட்சியை சார்ந்து பலத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.