பாஜகவினர் முதலில் டெபாசிட் வாங்க முயற்சிக்கட்டும்... அப்புறம் விமர்சிக்கலாம்: இளங்கோவன்
சென்னை: பிற கட்சியினரை விமர்சனம் செய்யும் முன்பு, சட்டசபை தேர்தலில் பாஜக இழந்த டெபாசிட்டை வாங்கக் கூடிய நிலைக்கு முன்னேற அக்கட்சியினர் முயல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். மூத்த அரசியல் அனுபவம் வாய்ந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபைக்குள் சிறப்பு இருக்கை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்க, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு கட்சித் தலைமை டெல்லியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,
தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கருத்து குறித்து நான் கூறுவதற்கு எதுவும் இல்லை என்றார்.
பிற கட்சியினரை விமர்சனம் செய்யும் முன்பு, சட்டசபை தேர்தலில் பாஜக இழந்த டெபாசிட்டை வாங்கக் கூடிய நிலைக்கு முன்னேற அக்கட்சியினர் முயல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏழு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நீக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றின் ஊகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது என்றார் இளங்கோவன்.
நாடாளுமன்றம், பிற மாநில சட்டசபைகளில் மூத்த உறுப்பினர்கள், உதவி தேவைப்படும் உறுப்பினர்கள் ஆகியோர் அமருவதற்கு அவைக்குள் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. அதை முன்னுதாரணமாகக் கொண்டு, மூத்த அரசியல் அனுபவம் வாய்ந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்குள் சிறப்பு இருக்கை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.