சிடி ரவி, அண்ணாமலைக்கு பரிவட்டம்.. சட்டென வந்து விழுந்த கேள்வி.. விறுவிறுவென கிளம்பிய அண்ணாமலை!
கோவை : பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்திற்கு பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், சிடி ரவி ஆகியோர் வருகை தந்தனர். அப்போது அண்ணாமலையிடம் கர்நாடகா தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் விறுவிறுவென கிளம்பினார் அண்ணாமலை.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் தொகுதியில் 5வது முறையாக தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரான சி.டி.ரவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தம்மையா என்பவர் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி 77,979 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்மையா 84,015 வாக்குகளைப் பெற்று, சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கோவை ஈச்சனாரி செல்வ மஹாலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளா்கள் பி.எல்.சந்தோஷ், வினோத் தவுடு, பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டுக்கான மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி மற்றும் தமிழ்நாட்டுக்கான மேலிட இணைப் பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக தோல்வியைச் சந்தித்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களான பி.எல். சந்தோஷ், சிடி ரவி ஆகியோர் பாஜக செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளனர். பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக செயல்பட்ட அண்ணாமலை தான் இந்த செயற்குழுவுக்கு தலைமை தாங்கினார்.

பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்கு அண்ணாமலை, சிடி ரவி உள்ளிட்டோர் வருகை தந்தபோது அவர்களுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அண்ணாமலை. செயற்குழு கூட்டம் பற்றி விளக்கினார் அண்ணாமலை. அப்போது கர்நாடகா தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
கர்நாடகா தேர்தல் தோல்வி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், எந்த பதிலும் அளிக்காமல் விறுவிறுவென கிளம்பிச் சென்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications