தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பது பகல்கனவு... சொல்கிறார் குஷ்பு
சென்னை: பிரதமர் மோடியின் மீதும் பாஜக மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர், இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக பாஜகவினர் கூறுவது வெறும் பகல் கனவுதான் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளியில் படிக்கும்போது நவபாரத சிற்பி நேரு என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் தினத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடாமல் விட்டு விட்டது.

காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்.
ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை.
கடந்த ஆட்சி காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள். எனவே மக்கள் பாஜக மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.
சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவு அதை காட்டுகிறது. இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது வெறும் பகல் கனவுதான். தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்றும் கூறியுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications