தினகரன்.. சசிகலா புஷ்பா..துக்ளக் குருமூர்த்தி.. ரஜினிகாந்த்- அடுத்த ரவுண்ட் ஆட்டத்தை தொடங்கும் பாஜக?
சசிகலா புஷ்பா, தினகரன், குருமூர்த்தி, ரஜினிகாந்தை முன்வைத்து அடுத்த ரவுண்ட் ஆட்டத்தை பாஜக தொடங்க இருக்கிறது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வந்ததுதான் தாமதம்.. தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறத் தொடங்கிவிட்டது.
ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக அறுவடையை செய்துவிட்டார். இரட்டை இலையை அடம்பிடித்து வாங்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியோ படுதோல்வியை சந்தித்துவிட்டது.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி சாதிக்கும் என நம்பிக் கொண்டிருந்த டெல்லிக்கு தர்ம அடிதான் மிச்சம். இதனால் அதிமுக தொடர்பான தனது வியூகங்களை சட்டென மாற்றுவதில் முனைப்பு காட்டுகிறது.
பாஜகவுடனான லாபி
தினகரனுடன் சசிகலா புஷ்பா திடீர் சந்திப்பு, ஓபிஎஸ்-ஈபிஎஸ் மீது துக்ளக் குருமூர்த்தி திடீர் பாய்ச்சல் என்பதெல்லாம் இந்த ஓரங்க நாடகத்தின் 2-ம் கட்டம் தொடங்கிவிட்டதையே குறிக்கின்றன. டெல்லியில் முகாமிட்டிருந்த சசிகலா புஷ்பா, பாஜகவுடனான லாபியை மிகவும் வலுவாக்கிக் கொண்டார்.
டெல்லி சித்துவிளையாட்டு
டெல்லி பாஜகவின் ஆதரவில்தான் அதிரடியான கருத்துகளை சசிகலா புஷ்பா வெளியிட்டும் வந்தார். சசிகலா குடும்பத்தின் மீது அதீதமான கோபத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார் சசிகலா புஷ்பா. அப்படிப்பட்ட சசிகலா புஷ்பாவே சட்டென தினகரன் தலைமையை ஏற்பதாக அறிவித்திருப்பது டெல்லியின் சித்துவிளையாட்டாக இல்லாமல் வேறு எதுவுமே இல்லை.
குக்கர் பக்கம் திரும்புகிறது?
அதேபோல் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகளிடையேயான ஒட்டுவேலையில் பரபரப்பாக இருந்தவர் துக்ளக் குருமூர்த்தி. இரு அணிகளும் வெளிப்படையாகவே குருமூர்த்தி வீட்டுக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்தியதும் நாடறிந்தது. அப்படிப்பட்ட குருமூர்த்தி இன்று, ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸை படு அநாகரீகமாக இழிவாகப் பேசி அந்த உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சசிகலா புஷ்பா பாணியில் துக்ளக் பார்வை குக்கர் பக்கம் திரும்பலாம் என்பதற்கான சமிக்ஞையோ என்கிற சந்தேகமும் இருக்கிறது.
அடுத்த ஆட்டம் ரெடி?
இந்த பரபரபரப்புகள் ஓய்வதற்குள்ளாக அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31-ந் தேதி அறிவிக்கப் போகிறேன் என்கிறார் ரஜினிகாந்த். அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றியெல்லாம் பேசாமல் அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் குறிப்பிடும்போதே யாருக்கு ஆதரவாக அவர் பேசுவார் என்பது புரியாமல் இல்லை. ஆக தினகரன், சசிகலா புஷ்பா, துக்ளக் குருமூர்த்தி, ரஜினிகாந்தை முன்வைத்து அடுத்த ஆட்டத்தை ஆட பாஜக மேடை போட்டுவிட்டது என்பதுதான் யதார்த்தம்!