அதிமுகவில் இணைந்தார் பாஜக வெள்ளையம்மாள் - நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலிலிருந்து விலகியவர்
சென்னை: பாஜக சார்பில் நெல்லை மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்து பின்னர் கடைசி நேரத்தில் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரிக்கு ஆதரவாக வாபஸ் பெற்று பரபரப்பை ஏற்படுத்திய வெள்ளையம்மாள் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜகவைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவர் நெல்லை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் இவருக்கு அதிமுக தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆசியும் பெற்றார் வெள்ளையம்மாள். இந்தப் பின்னணியில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் தனது கைக்குழந்தை, கணவருடன் போய் அதிரடியாக வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார் வெள்ளையம்மாள்.
இதனால் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரிக்கு போட்டி இல்லாத நிலை ஏற்பட்டு அவரும் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளையம்மாளின் செயலால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. வெள்ளையம்மாளை அதிமுகவினர் மிரட்டி வாபஸ் பெற வைத்ததாக பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் வெள்ளையம்மாள் தரப்பிலிருந்து வாயே திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளையம்மாள் தனது கணவர் கணேச பெருமாள்ராஜாவுடன் சேர்ந்து சந்தித்து கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார்.
இதேபோல மேலும் பல கட்சிகளைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் இன்று முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இரண்டறக் கலந்தனர்.












Click it and Unblock the Notifications