சு.சுவாமியை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும்: தி. வேல்முருகன்
சேலம்: தமிழர் விரோதி சுப்பிரமணியன் சுவாமியை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் இன்று வேல்முருகன் கூறியதாவது:

ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக்குகுழுவை இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் வருகிற 24-ந் தேதி பேரணி நடக்கிறது.
ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தொடங்கி தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் பேரணி முடிவடைகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர், தமிழ் ஆதரவாளர்கள், மனித நேய பண்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச சட்டப்படி கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும்.
3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. கத்தி படத்தை திரையிட கூடாது என்று போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம்.
தமிழக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டும் சுப்பிரமணியசாமி தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளும் சுப்பிரமணிய சாமியை பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications