தம்பிதுரை, ஓபிஎஸ் தலைமையில் விஸ்வரூபமெடுக்கும் அதிமுக(பாஜக) அணி?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக மெல்ல தன்னுடைய வேலைகளை காட்ட தொடங்கியுள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முதல்வர் ஜெயலலிதா துறைகளை தம் வசம் வைத்திருக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் தமக்கான ஆதரவு அணியை வளர்த்தெடுக்க தொடங்கியுள்ளது பாஜக.
அப்பல்லோ மருத்துவமனையில் 1 மாத காலத்துக்கும் மேலாக ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தொடக்கம் முதலே காய்களை நகர்த்தி வருகிறது பாஜக.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வராக்க முதலில் முயற்சித்தது. ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசகர் ராவ் மூலம் மத்திய அரசு இதற்கான நெருக்கடிகளை உருவாக்கியது.
ஓபிஎஸ்
ஆனால் அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா நடராஜன் தரப்பு இதை ஏற்கவில்லை. இதையடுத்து ஜெயலலிதா வசம் உள்ள துறைகளை ஓ. பன்னீர்செல்வத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அடுத்த காய்நகர்த்தலை மேற்கொண்டது பாஜக.
எடப்பாடி
இதற்கும் பிடிகொடுக்காமல் இருந்தது சசிகலா தரப்பு. அவர்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியைத்தான் தங்களது சாய்ஸாக வைத்திருந்தனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து குவிப்பு தொடர்பான அறிக்கைகளையும் கையில் வைத்துக் கொண்டுதான் அவரை நெருக்கிக் கொண்டிருந்ததாம் பாஜக.
தம்பிதுரையும் ஓபிஎஸ்ஸும்
இந்த விவகாரத்தில் சசிகலா தரப்பு சமாளிக்க முடியாமல் தோற்றுப் போக ஓபிஎஸ் வசமே ஜெயலலிதாவின் துறைகள் சென்றன. தற்போது தம்பிதுரையின் ஆலோசனைப்படிதான் ஓ. பன்னீர்செல்வம் செயல்பட வேண்டும் என மத்திய பாஜக அரசு 'வழிகாட்ட' தொடங்கியுள்ளதாம்.
அணிகள்....
சூழ்நிலையை புரிந்து கொண்ட சில அமைச்சர்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான இந்த அணியில் கை கோர்த்திருக்கிறார்களாம். இதனால் சசிகலா நடராஜன் தரப்பு ரொம்பவே ஆடிப்போயுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.