அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? பொன்.ராதாகிருஷ்ணன் 'நழுவல்' பதில்
சென்னை: அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பதில் சொல்லாமல் 'நழுவலாக' கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சி மேற்கொண்டது பாஜக. ஆனால் தேமுதிக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது.
அத்துடன் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வெளிப்படையாக தேமுதிக எந்த கட்சியின் பெயரை குறிப்பிட்டும் அழைப்பும் விடுக்கவில்லை.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என்பதில் எனக்கு கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. தேர்தலை கருத்தில் கொண்டு தேமுதிக தனியாக போட்டியிடுவது என்பது அவர்களது கட்சியின் நிலைப்பாடு. இது பற்றி முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட, ஆட்சி செய்து கொண்டு இருக்கிற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திராவிடம் இல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும். திராவிடம் இல்லாத அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் சேர வேண்டும் என்பது எனது கருத்து என்றார்.
அப்போது, தேமுதிக தலைமையிலான கூட்டணிக்கு பாஜக செல்லுமா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு அது பற்றி எதுவும் சொல்லமுடியாது என்றார்.
மேலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று நழுவலான பதிலைச் சொன்னார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications