பா.ஜ.க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யமாட்டேன்.. கூட்டணியை உருவாக்கிய தமிழருவிமணியன் விரக்தி!
கோவை: லோக்சபா தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவது இல்லை என்று காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவிமணியன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
காங்கிரஸ், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜனதா தலைமையில் புதிய அணியை உருவாக்க முயன்றேன். தற்போது அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
எனக்கு உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. எனவே, எந்தக்கட்சிக்கும் ஆதரவாக நான் பிரசாரம் செய்யவில்லை. மன உளைச்சல் காரணமாக பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதும் இல்லை.
பா.ஜ.க கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்ய வேண்டும். அவ்வாறு பிரசாரம் செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அவர்கள் 10 முதல் 15 இடங்கள் வரை வெற்றி பெற முடியும். இல்லையென்றால் அது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.

மரியாதை கொடுத்தால்
பா.ஜ.க அணியினர் உரிய மரியாதையுடன் காந்திய மக்கள் கட்சி தொண்டர்களை அணுகினால் மட்டுமே மோடி பிரதமராகவும், அந்த கட்சி வெற்றி பெறவும் ஆதரவளிப்போம்.

சுயநலக் கூட்டணி
பா.ஜ.க கூட்டணியில் உள்ள விஜயகாந்த், வைகோ, டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் சுயநலத்துக்காக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தொகுதி பெற வேண்டும் என்ற அளவுக்கு நானும் எனது இயக்கமும் தரம் தாழ்ந்து போய்விடவில்லை.

அரசியல் இயக்கம்
காந்திய மக்கள் இயக்கம், லோக்சபா தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் இயக்கமாக பணியாற்றும்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும். தமிழ் ஈழம் அமைய இந்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தான் முதலில் பா.ஜ.கவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் நிர்வாகத் திறமை இல்லாதவர். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி இல்லாமல் போய்விடும்.

மோடி பிரதமராவார்
காங்கிரசும், இடதுசாரிகளும் போலி மத சார்பின்மையை கையில் எடுத்துள்ளனர். எனவே பா.ஜ.க வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளது என்றார் தமிழருவி மணியன் கூறினார்.

கூட்டணியை உருவாக்கியவரே…
தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைந்து கூட்டணியை உருவாக்கியவர் தமிழருவி மணியன். இதற்காக பல கட்சியினர் அவரை அரசியல் தரகர் என்றும் கூட வசைபாடினர். பலமுறை கூட்டணிக் கட்சித்தலைவர்களை சந்தித்துப்பேசிய அவரே இப்போது பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications