பாஜக ஆட்சிக்கு வரட்டும்... சென்னை போலீஸ் ஸ்டேஷன்களுக்குப் 'பயங்கர' எச்சரிக்கை!
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.பணத்துக்காக மட்டுமே போலீசார் வேலை செய்கின்றனர். எனவே லஞ்சம் வாங்கும் போலீஸ் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தால்தான் விமோசனம் கிடைக்கும் என்று எச்சரித்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு மர்மக் கடிதம் வந்துள்ளது.
இந்தக் கடிதத்தை அனுப்பியது யார், எதற்காக இந்த மிரட்டல் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தையும், இந்த கடிதம் சாடியுள்ளது.
ராயபுரம் - மயிலாப்பூர்- ராயப்பேட்டை
சென்னை நகரின் முக்கியமான ராயபுரம், ஆர்.கே.நகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல காவல் நிலையங்களுக்கு இந்தக் கடிதம் வந்துள்ளது. இதில் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதால் போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ராயப்பேட்டையிலிருந்து போஸ்ட்
இந்த கடிதம் ராயப்பேட்டையிலிருந்து போயுள்ளது. எனவே ராயப்பேட்டை காவல் நிலையத்தில்தான் போலீஸார் அதீத உஷார் நிலையில் உள்ளனர். காவல் நிலையத்திற்கு வருவோர் கண்காணிக்கப்படுகின்றனர்.
ரிசப்ஷனோடு ஸ்டாப்
புகார் கொடுக்க வருவோரை உள்ளே அனுமதிக்காமல் வரவேற்பறையுடன் நிறுத்தி விசாரித்து புகாரைப் பெற்று அனுப்பி விடுகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால்
அந்தக் கடிதத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பணம் கொடுத்தால்தான் நடக்கிறது
காவல் நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால் பணம் கொடுத்தால்தான் உடனடி விசாரணை நடக்கிறது. இல்லாவிட்டால் புகாரை வாங்கி வைத்து கொண்டு விசாரிக்கிறேன் போ என அனுப்பி விடுகின்றனர்.
கட்டப் பஞ்சாயத்து
முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) உடனே போடுவது இல்லை. இதுமட்டுமல்ல புகார் கொடுப்பவர்கள் மீதே கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசூல் செய்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றனர்.
குண்டு வைத்தால்தான்
பணத்துக்காக மட்டுமே போலீசார் வேலை செய்கின்றனர். எனவே லஞ்சம் வாங்கும் போலீஸ் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தால்தான் விமோசனம் கிடைக்கும் என்று எழுதப்பட்டுள்ளதாம்.