சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும்.. மர்ம நபர் மிரட்டல் - போலீஸ் சோதனை
சென்னை: நாடு முழுவதும் ஓடும் 50க்கும் மேற்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும் என மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியா முழுவதும் ஓடும் 50-க்கும் மேற்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சோதனை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு கோவை புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும், 7.20 மணிக்கு சென்டிரலில் இருந்து பெங்களூரு புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் சோதனையிட போலீசார் முடிவு செய்தனர். தொலைபேசி அழைப்பு விடுத்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.