கோவை வரும் பிரதமர் மோடி மீது குண்டு வீசி தாக்கப்படும்: மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீஸ் விசாரணை
கோவை: நாளை கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

மோடியின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானப்படை விமானம் மூலம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வரும் மோடி கார் மூலம் சின்னியம்பாளையத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்க செல்கிறார்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் பிரதமர் மீது வெடிகுண்டு வீசப்படும் என்று கூறினார். மேலும் நேற்று முன்தினம் அதே நபர் மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் கோவையில் இருந்து போன் பேசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சென்னை போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்த 30 வயது நபரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த நபரின் விபரங்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications