போதையில் பொதுமக்களை பெல்ட்டால் அடித்த போலீஸ் கைது: 2 பேர் காயம்
திருப்பூர்: மதுபோதையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தவர்களை தனது யூனிபார்ம் பெல்ட்டால் தாக்கியதற்காக போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பெல்ட் தாக்குதலுக்கு ஆளான இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருப்பூர் அருகே உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டியைச் சேர்ந்த பிரபு (31). மடத்துக்குளத்தை அடுத்துள்ள கணியூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிறன்று இரவு சுமார் 7 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்புக் கொண்டிருந்த போது வழியில் துங்காவி கிராம பேருந்து நிறுத்தம் அருகே சிலர் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார். ஏற்கனவே மது அருந்தியிருந்த பிரபு, அவர்களிடம் சென்று சந்தேகத்திற்கிடமான வகையில் நிற்பதாகக் கூறி உடனடியாக அங்கிருந்து கலைந்து செல்லுமாறு மிரட்டும் விதத்தில் பேசியுள்ளார்.
ஆனால், அங்கிருந்தவர்கள் தாங்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், போதையில் இருந்த பிரபு அதனைக் கேளாமல் அவர்களைத் தனது யூனிபார்ம் பெல்ட்டால் தாக்கியுள்ளார்.
இதில், துங்காவியைச் சேர்ந்த கருப்புச்சாமி(வயது-29), மணி (வயது-26) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊர்மக்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஊர் மக்கள் திரண்டு வருவதைக் கண்ட பிரபு தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு பிரபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக்ச் சொல்லப் படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி துங்காவியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உடுமலை-தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதித்தது.
போலீஸ்காரர் பிரபுவைக் கைது செய்கிறோம் என மடத்துக்குளம் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் அளித்த உத்திரவாதத்தின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவான பிரபுவை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குடிபோதையில் இருந்தது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications