பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நெல்லை நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் கடந்த 6ம் தேதி இரவு நடுகடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உருவாகியுள்ளது. ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 9 கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒருநாள் கடலுக்கு செல்லப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுபுள்ளி வைக்கக் கோரியும் பிரதமர் மோடி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இருவரில் ஒருவராவது நேரில் வந்து தங்களிடம் உறுதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து 4வது நாளாக மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.