பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு – ஜாமீன் மனு மீதான விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தயாநிதிமாறனின் தனிச் செயலாளர் கவுதமன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சி.பி.ஐ சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக போதிய விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், தங்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் விசாரணை பாதிக்கப்படாது என்றும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது சி.பி.ஐ தரப்பு வாதமும் முன் வைக்கப்பட உள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என சி.பி.ஐ தரப்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பை தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் கடந்த 21 ஆம் தேதி தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கவுதமன், சன் டி.வி தொழில்நுட்ப ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.