தயாநிதி மாறனின் போன் மோசடியை அம்பலப்படுத்திய அதிகாரிக்கு பென்ஷன் நிறுத்தி வைப்பு
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக தங்களது சென்னை வீட்டில் தொலைபேசி இணைப்பகத்தை வைத்திருந்ததை அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல். அதிகாரியின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
ஒழுங்கு நடவடிக்கை என்று இதற்குக் காரணம் கூறியுள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.
அந்த அதிகாரியின் பெயர் மதிவாணன். இவர் துணைக் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

தயாநிதிக்கு எதிராக பிரசாரம் செய்தவர்
தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி குழுமத்திற்காக சட்டவிரோதமாக தொலைத் தொடர்புத் துறையை தயாநிதி மாறன் பயன்படுத்தி வருவதாக கிட்டத்தட்ட 3 வருடங்களாக பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடையே பிரசாரமே செய்து வந்தவர் மதிவாணன்.

ஜூன் மாதம் ஓய்வு
கடந்த ஜூன் மாதம் இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நிறுத்தி வைத்து விட்டது பி.எஸ்.என்.எல். நிர்வாகம். உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வராவிட்டாலும் கவலை இல்லை
இதுகுறித்து மதிவாணன் கூறுகையில், எனது ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தது எனக்கு அதிர்ச்சி தரவில்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனத்தின் ரூ. 440 கோடி இழப்புக்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்திய திருப்தி எனக்கு உள்ளது என்கிறார்.

திமுக குடும்பச் சண்டையும் காரணம்
மேலும் அவர் கூறுகையில், தயாநிதி மாறனின் அதிகார துஷ்பிரயோகம் அம்பலமானதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. மாறாக திமுகவுக்குள் ஏற்பட்ட குடும்பச் சண்டையும் முக்கியம்.

சென்னை சர்க்கிள் ஆபிஸ்தான் 'செட்டப்' செய்தது
மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தை சென்னை வட்ட பிஎஸ்என்எல். நிறுவனம் 2007ம் ஆண்டு மிகவும் ரகசியமான முறையில் அமைத்துக் கொடுத்தது. இதுதொடர்பான கோப்புகளை நான் தற்செயலாக கண்டு திடுக்கிட்டேன். மொத்தம் 323 இணைப்புகளை ரகசியமான முறையில் கொடுத்திருந்தனர். மிகவும்நவீனமான எக்ஸ்சேஞ்ச் அது. ஒரு ஜோடி ஆப்டிகல் பைபர் மூலம் அதை இணைத்திருந்தனர். மிகப் பெரிய அளவிலான டேட்டாக்களை அதி வேகமாக அனுப்பும் நவீனமுறையிலான இணைப்பும் கூட என்றார் மதிவாணன்.

பதவியை இழந்த தயாநிதி மாறன்
மதிவாணன் கொளுத்திப் போட்ட இந்த திரிதான் பின்னர் கொழுந்து விட்டு எரிந்து கடைசியில் தயாநிதி மாறன் பதவி பறி போகவும் காரணமாக அமைந்தது.

பழிவாங்கிய தலைமை பொது மேலாளர்
மதிவாணன் மேலும் கூறுகையில் தயாநிதி மாறனுக்கு எதிராக செயல்பட்ட என்னையும், மேலும் 78 பேரையும் பழிவாங்கும் போக்கில் நடந்து கொண்டார் தலைமைப் பொது மேலாளரான சுப்பிரமணியம். எங்களது பதவிக்காலத்திலும் கை வைக்கப் பார்த்தார். ஆனால் அதற்குப் பின் வந்த தலைமைப் பொது மேலாளர் அதை நிறுத்தி விட்டார். மாறாக, ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்ய பரிந்துரைத்தார். ஆனால் அதை பிஎஸ்என்எல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏற்கவில்லை. மறு பரிசீலனைக்கு அதை திருப்பி அனுப்பி வைத்தார். அந்தக் கோப்பு இன்னும் நிலுவையில் உள்ளது என்றார்.

மிகப் பெரிய நஷ்டம்
மதிவாணன் மேலும் கூறுகையில், இந்த சட்டவிரோத இணைப்பு விவகாரத்தை சிபிஐ மேலும் ஆழமாக விசாரிக்க வேண்டும். அதில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. ரூ. 440 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து 2.89 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து விடலாம். இந்தப் பணத்தை மாறனிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications