இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் நீக்கம்!
சென்னை: இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் சென்னையில் வெளியிட்டார்.
கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள செ.கு.தமிழரசன், இந்திய குடியரசுக்கட்சியின் மாற்றுக் கட்சி உறுப்பினராக இருந்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அதிமுக ஆட்சி அமைத்தபோது, செ.கு.தமிழரசன், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக்கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதற்காக கடந்த 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் நீக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சியின் பலம் எந்த அளவுக்கு உள்ளது என்று எங்களுக்கு தெரியும். தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து தனியாக குழு அமைத்து ஒரு சில நாட்களில் வெளியிடுவோம்.
தமிழகத்தில் 20 முதல் 25 சதவீத இளைஞர்கள் வாக்குகள் உள்ளன. அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.
இந்த பேட்டியில் கட்சியின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொள்ளவில்லை. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செ.கு.தமிழரசன் தனியாக இருக்கட்டும். கட்சி தொண்டர்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அவர்களது ஆதரவு எங்களுத்தான் உள்ளது என்றார்.
பிரகாஷ் அம்பேத்கரின் அறிவிப்பை பார்க்கும் போது இம்முறை இந்திய குடியரசுக்கட்சி, மக்கள் நலக்கூட்டணியுடனோ அல்லது திமுக உடனோ இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications