திருப்பூரில் கள்ளக்காதல்.. ஊட்டியில் வைத்து கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி!
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே எரிந்த நிலையில் காணப்பட்ட பிணத்தின் அடையாளம் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் கண்ணன். கால் டாக்சி டிரைவர். அவரைக் கொன்றது அவரது மனைவியும், மனைவியின் கள்ளக்காதலனும் என்று போலீஸார் கண்டுபிடித்து இருவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.
ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நடுவட்டம் டி.ஆர். தடுப்பணை அருகே, நவம்பர், 17-ம் தேதியன்று இரவு ஒரு அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீஸார் அந்த நபரின் பெயர் கண்ணன் என்பதையும், அவர் கால் டாக்சி டிரைவரையும் கண்டறிந்தனர். 43 வயதான கண்ணன், திருப்பூரில் வசித்து வந்தார்.
கண்ணனை 31 வயதான அவரது மனைவி ராணியும், ராணியின் கள்ளக்காதலனான 40 வயது சரவணனும் சேர்ந்து கொலை செய்து பிணத்தை எரித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தேனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது 2வது மனைவிதான் ராணி. முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து ராணியை மணந்தார் கண்ணன். ராணி, கண்ணனுக்கு உறவுக்காரப் பெண் ஆவார். குழந்தை இல்லை. கடந்த 8 வருடமாக திருப்பூரில் வசித்து வந்தனர்.
கண்ணன் கால் டாக்சி டிரைவராக இருந்தார். ராணி, பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்தபோது அந்த நிறுவனத்தின் புரடக்ஷன் மேனஜரான சரவணனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது கண்ணனுக்குத் தெரியவரவே அவர் மனைவியைக் கண்டித்துள்ளார்.
இதனால் என்ன செய்வது என்று யோசித்த ராணி, தனது கள்ளக்காதலனை, கணவருடன் நெருங்கிப் பழக வைத்து நண்பர்களாக்கினார். கண்ணனின் குடிப் பழக்கம் அதற்கு சாதகமாக அமைந்தது. அடிக்கடி கண்ணனை கூட்டிச் சென்று மது வாங்கிக் கொடுத்து அவரை நட்பு பிடித்துக் கொண்டார் சரவணன். பின்னர் இருவரும் கார் வாங்கி தனியாக டிராவல்ஸ் நிறுவனம் அமைத்தனர். இப்படி பிசினஸ் ரீதியாக பார்ட்னராக்கிக் கொண்ட பின்னர் சரவணனும், ராணியும் வழக்கம் போல தங்களது கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளனர்.
ஆனால் கண்ணன் இதை ஏற்கவில்லை. தொடர்ந்து தனது மனைவியை எச்சரித்து வந்தார். இதனால் கோபமடைந்தார் ராணி. சரவணனும் ஆத்திரமடைந்தார். கண்ணனைத் தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து காரணம் ஒன்றைக் கூறி தங்களது காரில் ஊட்டிக்கு கண்ணனை அழைத்துச் சென்றனர். வழியில் மது வாங்கிக் கொடுத்து கண்ணனை குடிக்க வைத்தார் சரவணன். பின்னர் நடுவட்டம் டி.ஆர்., பஜார் அணை அருகே, காரை நிறுத்தி, சரவணன் சிறுநீர் கழிப்பதாக கூறி, கண்ணனையும் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் ஏற்கனவே ராணி வாங்கிக் கொடுத்திருந்த புதிய கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் சரவணன். பின்னர் அவர் இறந்ததும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்து விட்டார். பின்னர் இருவரும் அங்கிருந்து போய் விட்டனர்.