ரூ.20 லட்சம் செலவு செய்தும் கேன்சர் குணமாகவில்லையே... மனமுடைந்த பெற்றோர் மகனுடன் தற்கொலை
சென்னை: மகனின் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாததால், மனமுடைந்த பெற்றோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி கோபி நாயக்கன் தெருவைச் சேர்ந்த கமலக் கண்ணன் (54), கவுரி (48) தம்பதியினரின் ஒரே மகன் சதீஷ்குமார் (24). இவர் பி.இ. படித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சதீஷ்குமாருக்கு புற்றுநோய் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்டும், புற்றுநோய் குணமாகவில்லை. இதனால், சதீஷின் பெற்றோர் மனவருத்தத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கமலக்கண்ணன், கவுரி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலை வெகுநேரமாகியும் வீட்டுக் கதவு திறக்கப் படாமலேயே இருந்ததால் சந்தேகமடைந்தார் கமலக்கண்ணனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அவரது தம்பி ராமகிருஷ்ணன்.
இதனால், கமலக்கண்ணன் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த ராமகிருஷ்ணன், வரவேற்பு அறையில் கமலக்கண்ணனும், கௌரியும் மின் விசிறியில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு இறந்து தொங்கிக் கொண்டிருப்பதையும், படுக்கை அறையில் சதீஷ்குமார் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ராமகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார், உடல்களைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கமலக்கண்ணன் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப் பட்டது. அந்த கடிதத்தில், "மகனின் நோயை குணப்படுத்த ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலவழித்தோம். எந்த பலனும் இல்லை. மகன் தினமும் நோயால் அவதிப்படுவதை எங்களால் பார்க்க இயலவில்லை. தினமும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே வேறு வழியின்றி 3 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் உண்டானது.