வேட்பாளர்களுக்கு பூர்ணகும்பம்… ஆரத்தி.. மாலை மரியாதை… ஆர்.கே. நகரில் களைகட்டிய பிரச்சாரம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் காலையில் இருந்தே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பூர்ணகும்பம், ஆரத்தி, மாலை மரியாதை என பொதுமக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சென்னை: நட்சத்திர தொகுதியான ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி இந்தத் தொகுதியின் எம்எல்ஏவும் முதல்வருமான ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனையடுத்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தத் தொகுதியில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் 62 பேர் களத்தில் இருந்தாலும், திமுகவின் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சியின் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் மதுசூதனன், சிபிஎம்மின் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா, பாஜகவின் கங்கை அமரன் ஆகியோர் மிக முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
அனல் பறக்கும் பிரச்சாரம்
போட்டியிடும் அரசியல் கட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் 6 மணிக்கெல்லாம் ஒன்று கூடிவிடுகின்றனர். அங்கிருந்து தெருத் தெருவாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். டிடிவி தினகரன், அவரது சின்னமான தொப்பியை தலையில் அணிந்து கொண்டு வேனில் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
வீடு வீடாக…
திமுக வேட்பாளர் மருது கணேஷ் நடந்து சென்று வீடு வீடாக ஓட்டு வேட்டையை நடத்தி வருகிறார். இதே போன்று சிபிஎம் வேட்பாளர் லோகநாதன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோரும் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பூர்ண கும்ப மரியாதை
இன்று காலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மருது கணேஷிற்கு ஆர்.கே. நகர் மக்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து, மாலை அணிவித்து வரவேற்னர். அவர்களிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு மருது கணேஷ் கேட்டுக் கொண்டார். இதேபோன்று வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.
சுட்டெரிக்கும் வெயில்
கடும் வெயிலிலும் தங்களது வெற்றியை உறுதி செய்வதற்காக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்கள், காலை 11 மணியளவில் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொள்கின்றனர். பின்னர் பிற்பகர் 3 மணிக்கு தங்களது பிரச்சாரத்தை தொடங்கி இரவில் முடிகின்றனர்.