மெரினா கடற்கரையில் திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று நடைபெறும்: திருமுருகன்காந்தி
மெரினா கடற்கரையில் திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று மாலை நடைபெறும் என்று திருமுருகன்காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே இன்று மாலை திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் இனப்படுகொலை நடந்ததன் நிகழ்வாக ஒவ்வோர் ஆண்டும், மே 17 இயக்கத்தின் சார்பில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நடப்பது வழக்கம். இதில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு அதற்கான நிகழ்வு இன்று மாலை நடைபெறும் என்றும் அதில் வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் மே 17 இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், போராட்டம், நினைவேந்தல் என்கிற பெயரில் மெரினா கடற்கரையில் கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில், இன்று மாலை திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வு மெரினா கடற்கரையில் நடைபெறும். நினைவேந்தல் நிகழ்வு என்பது சர்வதேச பண்பாட்டு நிகழ்வு. இதற்கு நீதிமன்றமோ, காவல்துறையோ தடை விதிக்க முடியாது. அப்படியே தடுத்தாலும் கைதாகவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த நினைவேந்தல் நிகழ்வில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.