தோண்டத் தோண்ட நாய்கள் - ராணிப்பேட்டையை அலற வைத்த நாய் வேட்டை!
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் விஷ ஊசி போட்டு நாய்களைக் கொன்று குவித்து புதைத்த கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தோண்டத் தோண்ட நாய்களின் எலும்புக் கூடுகள் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை 21 நாய்களின் உடல்களும், எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்தும் தெருநாய்கள், விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளனர்.

ராணிப்பேட்டை பிஎச்இஎல் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இந்த நாய்களை புதைத்துள்ளனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை நாய்களை வெளியில் எடுக்கும் பணி நடந்தது. நான்கு அடி ஆழத்தில் நாய்களைப் போட்டு புதைத்துள்ளனர்.
அதில் சில நாய்களின் உடல்கள் மிகவும் அழுகிப் போயிருந்தன. அந்த இடத்திலேயே நாய்களுக்குப் பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு இந்த நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்புதான் நாய்கள் மொத்தமாக கொல்லப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் புகார் வந்தது. முன்னதாக இதுகுறித்து கல்லூரி மாணவர் ஒருவர் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு மெயில் அனுப்பியிருந்தார். அவர் உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலர் சோமநாதனை உஷார்படுத்தினார். அவர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் விசாரணையை போலீஸார் முடுக்க விட்டனர்.












Click it and Unblock the Notifications