ஜெ. வை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீதான வழக்கு: செப்.16-க்கு ஒத்திவைப்பு!
நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாகர்கோவில் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 16ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதியன்று தே.மு.தி.க. பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் ஞானசேகர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கேட்டு விஜயகாந்த் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜயகாந்த் நேரில் ஆஜராக விலக்கு அளித்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் சார்பில் வழக்கறிஞர் பொன்.செல்வராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.