அரசியல் காரணங்களுக்காகவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு, சோதனைகள் எல்லாம்... கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை : அரசியல் காரணங்களுக்காகவே ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சோதனைகள் செய்வதாக செய்திகளை வரச் செய்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்றே நினைக்கத் தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
மத்திய அமைச்சராக இருந்த, தி.மு. கழகத்தைச் சேர்ந்த தம்பி ஆ. ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடைபெற்றதாகவும், ஏதோ ஆவணங்களை எல்லாம் கைப்பற்றியதாகவும் கடந்த சில நாட்களாக ஒரு சில நாளேடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அது பற்றி இன்றைய தினம் மாலையில் கழக அலுவலகத்தில் ராசா என்னைச் சந்தித்து, இது பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விளக்கினார். அந்த விளக்கத்தை நாளைய தினம் உரிய அதிகாரியிடமும் செய்தியாளர்களிடமும் அவரையே விளக்கிக் கூறுமாறு தெரிவித்திருக்கிறேன்.
அவர் என்னிடம் கூறும்போது, 13-11-2013 அன்று சி.பி.ஐ. யின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நீதிபதியின் முன்பாகவே ராஜாவின் மீதோ, அவருடைய குடும்பத்தினர் மீதோ எந்தவிதமான சொத்துக் குவிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும் சொன்னார்.
ஆனால் இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ. அதிகாரி, ராசா மீதும், மற்றும் அவர் குடும்பத்தினர், நண்பர்கள் மீதும் புதிய ஒரு வழக்கைத் தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த கழகத்தினர் மீது தொடர்ந்து அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ராசா மீது ஏற்கனவே வழக்கு தொடுத்து, அதன் மீதான விசாரணைகள் எல்லாம் முடிவுறும் கட்டத்தில், அண்மையில் பொதுத் தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் வேண்டுமென்றே இப்படியெல்லாம் சோதனைகள் செய்வதாக செய்திகளை வரச் செய்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்றே நினைக்கத் தோன்றுகிறது.
இவ்வாறு தி.மு.க தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.