விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 'கேன்டி கிரஷ்' விளையாடிய பெண் அதிகாரி: தீயாக பரவிய வீடியோ
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் கேன்டி கிரஷ் விளையாடியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் கேன்டி கிரஷ் என்னும் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அவர் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கேன்டி கிரஷ் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. ரெட் பிக்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
கேன்டி கிரஷ் விளையாடிய அந்த பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு அருகில் அமர்ந்து இந்த சேட்டையை செய்துள்ளார். அதிகாரிகள் தங்களின் குறைகளை நிச்சயம் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் பெண் அதிகாரி கேன்டி கிரஷ் விளையாடிய செய்தி அறிந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.