திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் குண்டுகட்டாக கைது
திருச்சி தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சி தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பிற்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஒரு திட்ட அமைப்பு தான் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று காவிரி பிரிச்சினையில் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
முற்றுகையால் பதற்றம்
இந்தப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் அதிகாரம் அமைப்பினர் காலையிலேயே திருச்சி மாநகரில் குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க திருச்சி தபால் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அரசுக்கு எதிராக முழக்கம்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சரவணன், தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், `கடைமடை வரைக்கும் காவிரி நீர்ப் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை... உறவும் இல்லை' என்ற தொண்டர்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில், குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே. சமத்துவம் இல்லாத தேசிய ஒருமைப்பாடு எதற்கு? உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் திருச்சி நகரெங்கும் தொண்டர்கள் ஏந்திவந்தனர்.
கைது செய்த போலீஸ்
போராட்டக்களத்திற்கு வந்த காவல்துறையினர் மக்கள் அதிகாரத்தினரை கலைந்து போக வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் நாங்கள் கலைந்து போக மாட்டோம் என்று கூறினார்கள். இதனையடுத்து குண்டுகட்டாக பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் அவர்களை கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினார்கள். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 2000க்கும் அதிகமானோர்களில் பாதி பேர் தான் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல, தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றும், அதற்கு அச்சாரமாகத்தான் திருச்சியில் இந்த போராட்டமானது நடைபெற்று வருவதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்தனர்.