கர்நாடக தமிழர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு- சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
கடந்த 9-ந் தேதியன்று கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. இப்போராட்டத்துக்கு ஆதரவாக கன்னட திரை உலகத்தினரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் மீது தாக்குதல்
இதனை விமர்சித்து சமூக வலைதளங்களில் சுரேஷ்குமார் என்ற தமிழர் பதிவுகளை போட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒன்று சுரேஷ்குமாரை தாக்கி மன்னிப்பு கேட்கச் செய்தனர்.
கொந்தளிப்பு
கர்நாடகாவில் ஏற்கனவே தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் அதே நிலை தொடரும் என பல அரசியல் கட்சிகள் எச்சரித்திருந்தன.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை மயிலாப்பூர் உட்லன்ஸ் ஹோட்டல் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் ஹோட்டலுக்குள் நுழைந்து வரவேற்பறையை உடைத்து நொறுக்கினர்.
பதற்றம்
அப்போது, கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடரும் என எழுதப்பட்ட காகிதத்தை அவர்கள் வீசிச் சென்றனர். இதனால் சென்னையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னட பள்ளிகளுக்கு பாதுகாப்பு
சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கன்னட பள்ளி, அயனாவரத்தில் உள்ள கன்னட பள்ளி, கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை உள்ளிட்டவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.