விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு.. நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமாரிடம் சிபிசிஐடி விசாரணை
நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை விவகாரத்தில் இன்று மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணைக் கோட்ட டிஎஸ்பியாக இருந்தவர் விஷ்ணுப்பிரியா. தைரியமானவர், நேர்மையானவர் என்று அறியப்பட்ட விஷ்ணுப்பிரியா, சர்ச்சைக்குரிய கோகுல்ராஜ் கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்க விடாமல் போலீஸ் தரப்பிலேயே பலர் முயற்சி செய்து வருவதாக பேச்சு உள்ளது. அரசியல் மற்றும் அதிகார பலம் காரணமாக யுவராஜ் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விஷ்ணுப்பிரியாவுக்கும் நெருக்கடிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் திடீரென தனது அதிகாரப்பூர்வ வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார் கொடுத்த தொடர் தொல்லைகள், அழுத்தங்கள், மிரட்டல்கள், திட்டியது உள்ளிட்டவைதான் காரணம் என்று வலுவான புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மரணத்திற்கு முன்பு கடைசியாக செந்தில்குமாரிடம்தான் விஷ்ணுப்பிரியா பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை அவரது நெருங்கிய தோழியும், கீழக்கரை டிஎஸ்பியுமான உமா மகேஸ்வரியும் உறுதிப்படுத்தியுள்ளார். அவரும் செந்தில்குமார் டார்ச்சர் செய்து வந்ததாக பகிரங்கமாகவே புகார் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விஷ்ணுப்பிரியா வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இன்று சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி, செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினார்.