ஜெ. மர்ம மரணம்.. மோடியையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.. 'திடுக்' காரணங்களை அடுக்கும் திருநாவுக்கரசர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடியையும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: 75 நாள்கள் மரண படுக்கையில் உள்ள ஒரு முதல்வரை பார்க்க வரவில்லை, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லவும் நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டம் விளக்கக் கூட்டத்தை மாலை மயிலையில் உள்ள மாங்கொல்லையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பேசுகையில், முழு அடைப்புக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தேர்தலில் இணையவதில் தவறில்லை. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நிச்சயதார்த்தம்தான். தற்போது அது முடிந்தவுடன் திருமணம் எனும் கூட்டணி விரைவில் அமையும். திமுகவின் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.
மாநில அரசுக்கும் தமிழ்நாட்டின் விவசாயிகள் மீது அக்கறை இருக்குமேயானால் மோடி தமிழகத்தை புறக்கணிப்பதாக நினைத்தீர்களேயானால் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கருதினாலோ திமுக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து பேருந்துகள் ஓடாது , அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவித்தால் கொஞ்சம் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க உங்களுக்கு வழி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி, குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. வறட்சி, வார்தா புயல் பாதிப்பு நிவாரணமாக சுமார் ரூ.88,000 கோடியை தமிழக அரசு கோரியது. ஆனால் யானை பசிக்கு சோளைபொறி என்பது வெறும் ரூ.4,000 கோடிக்கு குறைவாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதைக் கொண்டு 4 மாவட்டங்களின் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அதிமுகவின் ஒரு அணி கேட்கிறது. ஜெயலலிதா நலமுடன் இருந்தபோது போயஸ் தோட்டத்துக்கு வந்து விருந்து சாப்பிட்ட மோடியால் அவர் மருத்துவமனையில் கிடந்த 75 நாள்களில் ஒரு நாள் கூட அவரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ, அல்லது அதன் செயலாளரோ யாரும் வந்து பார்க்கவில்லை.
எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எம்ஜிஆரை அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்தார். அதன் பின்னர் 2 ஆண்டுகள் அவர் முதல்வராக பணியாற்றினார். ஆனால் இந்த பிரதமர் மோடியோ பக்கத்து நாடான சிங்கப்பூருக்கு கூட ஜெ.வை கூட்டி செல்லவில்லலை.
எனவே பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோர் மீது அடக்கிய சிபிஐ விசாரணைக்கு உள்படுத்தினால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும். மரண படுக்கையில் 75 நாள்கள் இருந்த ஜெயலலிதாவை, வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க மத்திய அரசு முயற்சிக்காதது ஏன்?
டெல்லி சென்றுள்ள முதல்வர், விவசாயிகளை சந்திக்காமல் பன்னீர் செல்வம் முதல்வரா அல்லது எடப்பாடியே முதல்வரா என்ற பஞ்சாயத்து செய்ய பிரதமருக்காக காத்துக் கிடக்கிறார். மோடிக்கு முன்னால் இரு அணியினரும் அமைச்சர்கள் மண்டியிட்டு கிடக்கிறார்கள் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சௌந்தரராஜன் தெரிவிக்கையில், தமிழகத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்தவுடன் அதற்கான நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ஆனால் இங்கு கேட்டதோ ரூ.39,000 கோடி, கிடைத்ததோ ரூ. 1,478 கோடி. மற்ற மாநிலங்களுக்கு 70 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் வெறும் 4.48 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததாக முன்னுதாரணங்கள் இல்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் பொய்யான தகவலை கூறுகிறார்.
கடந்த 1989-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ரூ.10,000 கோடி கடன் தள்ளுபடி செய்தார். கடந்த 2008-இல் காங்கிரஸ் கட்சி ரூ.64,000 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. மோடி அரசாங்கமானது ஏழைகளுக்கானது அல்ல, பெரு நிறுவனங்களுக்கானது ஆகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications