சட்டசபை தேர்தல்: 9ம் தேதி புதுவையில், 10-11 தேதிகளில் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தல் குறித்து முடிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உள்ளிட்ட அதிகாரிகள் வரும் 10ம் தேதி சென்னை வருகிறார்கள்.
அதிமுக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதே போன்று புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் ஆளும் அரசுகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதையடுத்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் கைதி சம்பந்தப்பட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அண்மையில் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வரும் 9ம் தேதி புதுச்சேரிக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
இதையடுத்து மறுநாள் அதாவது 10ம் தேதி சென்னை வந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த ஆலோசனை 10 மற்றும் 11ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.