திருச்சி மின் மயானத்தில் எரிக்கப்படாத சடலங்கள்.. உடல் உறுப்பு திருட்டு மாஃபியா கைவரிசையா?
திருச்சி: சடலத்தை எரிக்காமல், வேறு நபர் அஸ்தியை கொடுத்த மின் மயானம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, எடமலப்பட்டியை சேர்ந்த பாப்பம்மா என்பவர் மரணமடைந்த நிலையில், இறுதி சடங்குகள் முடிந்து,

கருமண்டபத்திலுள்ள மின் மயானத்துக்கு அவரது உறவினர்கள் உடலை கொண்டு சென்றனர்.
மின் மயானத்தில் உள்ள பணியாளர்கள், சடலத்தை பெற்றுக்கொண்டு எரிப்பதற்காக கொண்டு சென்றனர். கால் மணி நேரம் கழித்து, பாப்பம்மாவின் அஸ்தியை உறவினர்களுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார் மயான பராமரிப்பாளர்.
ஆனால், அந்த அஸ்தியில் கொஞ்சமும் சூடு இல்லை. ஆறிப்போயிருந்தது. இதனால் பாப்பம்மா உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, பாப்பம்மா உடல் எரிக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, மேலும் மூன்று சடலங்கள் எரிக்கப்படாமல் இருந்துள்ளன.
இதையடுத்து பாப்பம்மா உறவினர்கள், மின் மயான பணியாளர்களுடன் தகராறு செய்தனர். கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனிடையே போலீசார் வந்த பிறகு மீண்டும் பாப்பம்மாள் உறவினர்கள் மயானத்திற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மற்ற 3 உடல்களும் மாயமாகிவிட்டதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், மின் மயானத்தில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
சடலங்களை எரிக்காமல் வைத்திருந்ததன் நோக்கம் என்ன, இதன் பின்னணியில் உடல் உறுப்புகளை திருடும் மாபியாக்கள் உள்ளனரா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications