தமிழகத்திற்கு ஆர்.டி.இ நிதியை அள்ளித் தர்றோமே... 'ஏர்போர்ட்' நாராயணசாமி
சென்னை: ஆர்.டி.இ எனப்படும் கல்வி பெறும் உரிமைக்கான நிதி அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக வழங்கப் படுவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் கல்வி பெரும் வகையில் ‘கல்வி பெறும் உரிமைச் சட்டம்' உருவாக்கப் பட்டது. இதன்படி, தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு தங்களது பள்ளியில் 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கான நிதியை அரசு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வழங்கி விடும்.

ஆனால், அரசிடம் இருந்து நிதி சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி முதலில் இந்தாண்டு இடஒதுக்கீடு தர இயலாது என மறுத்த தனியார் பள்ளிகள், பின்னர் இடஒதுக்கீடுக்கு சம்மதம் தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய ஆர்.டி.இ. நிதியை வழங்குவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி கூறியதாவது:-
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. மாடுகளை துன்புறுத்துவதை தடுக்க புதிய சட்ட விதிகளை ஏற்படுத்தலாம்.
மத்திய அரசு நாடு முழுவதும் கட்டாய கல்வி சட்டத்தை (ஆர்.டி.இ.,) அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். அதற்கான மானியத்தை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த மானியம் தமிழகத்திற்கும் முறையாக வழங்கப்படுகிறது.
ஆனால், சில தனியார் பள்ளிகள் மானியம் சரியாக கிடைப்பதில்லை என புகார் கூறுகின்றன. மாநில அரசுகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து பரிமாற்றத்தால் தான் அவர்களுக்கு மானியம் சரியாக போய்ச் சேருவதில்லை. மத்திய அரசு தரும் நிதியை மாநில அரசுகள் முறையாக வழங்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications