வர்தா புயல் பாதிப்பு... மத்திய குழு சென்னை வந்தது.. இன்று முதல்வருடன் சந்திப்பு
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு சென்னை வந்தடைந்தது.
சென்னை: தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையிலான மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர்.
கடந்த 12 ஆம் தேதி சென்னை அருகே கரையைக் கடந்தது வர்தா புயல். புயல் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் கீழே சரிந்து விழுந்தன. 30 ஆயிரம் மின்கம்பங்கள், 600 டிரான்ஸ்பார்மர்கள், 70 ஆயிரம் வீடுகள், படகுகள், விவசாய நிலங்கள் கடும் சேதம் அடைந்தன. புயல் பாதிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 19-ந் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் நிவாரண நிதியாக ரூ. 22,573 கோடி தேவை என்று வலியுறுத்தி இருந்தார். புயல் சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையிலான மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர்.
இந்த குழுவினர் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்னர் ராயபுரம், தி.நகர் பனகல் பார்க், அமைந்தகரை அண்ணா ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் பாதிப்பு மற்றும் திருமங்கலத்தில் சரிந்து விழுந்த மரங்கள் மற்றும் அதன் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, மாலையில் மின்சார உள்கட்டமைப்பு வசதி சேதம் குறித்து மற்றும் காஞ்சிபுரம் வண்டலூர் பூங்கா ஆகிய இடங்களில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகின்றனர். வரும் 30 ஆம் தேதி வரை இந்த குழு ஆய்வு நடத்துகின்றது.












Click it and Unblock the Notifications