திருவாரூர் கல்லூரியில் எம்ஏ தமிழ் படித்தால் ரூ. 3,000 உதவி தொகை
தஞ்சாவூர்: திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் எம்ஏ செம்மொழி தமிழ் படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் மாதம்தோறும் ரூ.3000 உதவி தொகை வழங்கப்படுகிறது என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முத்துவேலு தெரிவித்தார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முத்துவேலு நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 2013-14ம் நிதியாண்டிக்கு கருத்தரங்கு, பயிலரங்கு நடத்த நிதியதவி அளித்து வருகிறது.
பத்து நாட்கள் பயிலரங்கு நடத்துவதற்கு ரூ.2.50 லட்சமும், 3 நாட்கள் கருத்தரங்கு நடத்துவதற்கு ரூ.1.50 லட்சமும் வழங்குகிறது. சங்க இலக்கியங்களில் வாழ்க்கை முறை, மேலாண்மை, சுற்று சூழல், வாழ்கை சூழல், கல்வி, அறிவியல் போன்றவை தொடர்பான தனி ஆராய்ச்சியாளர் ஆய்வு திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வுக்கு ரூ.2.50 லட்சம் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் எம்ஏ செம்மொழி தமிழ் வழி வகுப்புக்கு மாணவர் ஓவ்வொருவருக்கும் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புத்தகம் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றார்.