மோடி தந்த உத்தரவாதம்! குடியரசு தினத்தில் மன்னார்குடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் செக் வைத்ததன் பரபர பின்னணி
பிரதமர் மோடி தந்த உத்தரவாதத்தால்தான் குடியரசு தினத்தில் மன்னார்குடி கோஷ்டிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செக் வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: முதல்வர் பதவியில் நீங்களே தொடர வேண்டும்; உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என பிரதமர் மோடி கொடுத்த உத்தரவாதத்தால் உற்சாகமடைந்திருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதனால்தான் குடியரசு தின விழாவில் தலைகாட்ட நினைத்த மன்னார்குடி கோஷ்டிக்கு செக் வைத்ததுடன் மனைவியுடன் மேடையேறினாராம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சியில் மாணவர்கள் இறங்கியிருந்தனர். அப்போது வறட்சி நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க 19-ந் தேதியன்று அப்பாயின்மெண்ட் தந்துள்ளது டெல்லி.
இதனைத் தொடர்ந்து மாணவர் புரட்சி உச்சகட்டத்தை அடைந்ததால் ஜல்லிக்கட்டுக்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் டெல்லி சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பிரதமரிடம் கொடுத்த மனுவில் வறட்சி நிவாரணம் தொடர்பாகத்தான் இருந்திருக்கிறது.
மோடியிடம் ஜல்லிக்கட்டு பிரச்சனை
அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்பாக மோடியிடம் விளக்கமும் அளித்திருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அப்போதுதான் வழக்கு நிலுவையில் உள்ளது; நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என உறுதியளித்திருக்கிறார்.
சசிகலா குறித்து விசாரணை
அப்போது சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் தலையீடு குறித்தும் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். முதல்வர் பதவியில் எப்படியும் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் தீவிரமாக இருக்கிறார்கள்; இதனால் எனக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
மோடியின் உத்தரவாதம்
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, உங்களைத் தவிர வேறு யாரும் முதல்வர் நாற்காலியில் அமருவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது; உங்களுக்கு முழுமையாக நாங்கள் ஆதரவு தருகிறோம் என கூறியிருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த உத்தரவாதத்தால் உற்சாகமடைந்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
மனைவியுடன் மேடை ஏறிய ஓபிஎஸ்
இதை தமது உறவினர்களிடமும் பகிர்ந்து கொண்டாலும், என்னதான் பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுத்தாலும் மன்னார்குடி கோஷ்டி நாளையே நெருக்கடி கொடுத்தால் என்னதான் செய்ய முடியும்? எனவும் புலம்பியிருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அத்துடன் பிரதமர் மோடியின் உத்தரவாதத்தால்தான் குடியரசு தின நிகழ்ச்சியில் தலைகாட்ட முயற்சித்த மன்னார்குடி கோஷ்டிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை; அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் மனைவியுடன் முதல் முறையாக மேடையேறினாராம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.