தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் உட்பகுதியில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்க உள்ளது. ஆனால், கத்தரிக்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இப்போதே பகல் பொழுதுகளில் வெளியில் செல்ல இயலாமல், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். எனவே, கத்தரி ஆரம்பித்தால் இன்னும் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் உட்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களை சற்று குளிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து ஓரளவுக்கு ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது. அந்த காற்று தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு வீசும். அதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்பதால் வெப்பத்தின் தீவிரம் சற்று குறையும்.
காலநிலையும் இயல்பை ஓட்டியே இருக்கும். கோடை மழையை பொறுத்தவரையில் தமிழகத்தின் உட்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரையில் 94 முதல் 96 டிகிரி வரை வெப்பம் இருக்கும். காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்களும் கவனமாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்" என்றனர்.












Click it and Unblock the Notifications