உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் நிச்சயம் படுதோல்விதான்... சந்திரகுமார்
சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் படுதோல்வியைத்தான் தழுவும் என்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
தி.மு.க.வில் மக்கள் தே.மு.தி.க. இணையும் விழா வரும் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் ம.தே.மு.தி.க. தலைவர் சந்திரகுமார் கூறியதாவது:
சேலத்தில் தி.மு.க.வில் மக்கள் தே.மு.தி.க. இணையும் விழா மாநாடு போல நடைபெறும். மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 3 லட்சம் பேர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள்.
தே.மு.தி.க.வை விட்டு வெளியேறியவர்கள் யாரும் மீண்டும் தே.மு.தி.க.வுக்கு செல்லவில்லை. மக்கள் தே.மு.தி.க.வை பார்த்து பயப்படும் நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுவிட்டது.
விஜயகாந்த் சுயமாக முடிவு எடுப்பதில்லை. கட்சியை நடுகாட்டில் விட்டு விட்டார். நான் கடைசி வரை தி.மு.க. தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தே.மு.தி.க. அறக்கட்டளையில் விஜயகாந்த் குடும்பத்தினரே உறுப்பினர்களாக உள்ளனர்.
அறக்கட்டளை கட்சிக்கு சொந்தமானதா என்பது குறித்து விளக்கம் தேவை. உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை விட படுதோல்வி அடையும்.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.