அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 2158 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்!
தூத்துக்குடி: தமிழக கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பல் வழங்கில் 2158 பக்க குற்ற பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்கா கப்பலை கடலோர காவல் படையினர் கடந்த அக்டோபர் 11ந் தேதி சிறை பிடித்தனர். அக்கப்பலில் இருந்து 35 நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கப்பல் கேப்டன் உட்பட ஊழியர்கள் 35 பேரையும் அக்டோபர் 18ந் தேதி தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தூத்துக்குடி முதலாவது ஜெஎம் நீதிமன்றம், ஆயுத கப்பலில் இருந்த 35 பேருக்கும் ஜாமீன் வழங்கி 26ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து கியூ பிரிவு போலீசார், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இம் மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி 35 பேரின் ஜாமீன் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தார்.
பரபரப்பான இந்த சூழலில் 74 நாட்களுக்கு பின்னர் தூத்துக்குடி முதலாவது ஜேஎம் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிக்கையை நேற்று தாக்கல் செய்தனர்.
2158 பக்கம் கொண்டஇந்த குற்ற பத்திரிகையில் முதல் குற்றவாளியாக அமெரிக்க ஆயுத கப்பல் நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. 2வது குற்றவாளியாக அதன் இயக்குனர் வில்லியம் ஹக்க் வாட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 35 பேருடன் அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை செய்த ரஞ்சன், மரிய ஆண்டன், விஜய செல்வம். முருகேசன் ஆகிய 5 பேரும் குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களையும் சேர்த்து மொத்தம் 45 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications