காவிரி வாரியம் அமைக்காத பிரதமருக்கு எதிர்ப்பு... அறிவாலயம், கருணாநிதி, வைகோ வீட்டில் கருப்புக்கொடி!
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக இன்று சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர். இதன் பேரில் சென்னை அண்ணா அறிவாலயம், திமுக தலைவர் கருணாநிதி வீடு, வைகோவின் வீடு உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை எந்தப் பிரச்னையின்றியும் பெற்றுத் தரக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவை அலட்சியப்படுத்தியதோடு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்து காவிரி வாரியம் அமைப்பதை மேலும் தள்ளிப்போட்டுள்ளது மத்திய அரசு.

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்தே பாஜக காய் நகர்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகே திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் இன்று சென்னை வருகிறார்.
அவருக்கு கருப்புக்கொடி காட்டி தமிழர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பிரதமர் வரும்போது தமிழகம் கருங்கடலாக காட்சியளிக்க வேண்டும் என்றார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை விமான நிலையத்தில் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று தெரிவித்துள்ளது. கருப்புக்கொடி போராட்டங்களால் பிரதமரின் பெரும்பாலான பயணம் வான்வழியாகவே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை நகரில் பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம், திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று தஞ்சாவூரிலும் பெரும்பாலான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் காய்கனி சந்தை, வடக்கு வீதி உள்பட பல இடங்களிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications