சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. மேயர் பிரியாவின் புதிய திட்டம்.. அதுவும் வடசென்னையில்!
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ராயபுரம் மண்டலத்தில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் வரும் மே3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைகள் கண்டறியப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்.
சென்னை மாநகராட்சி சார்பில் மக்களிடம் புகார்களை பெற பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக 1913 தொலைபேசி எண், நம்ம சென்னை செயலி, தபால்கள் வாயிலாக புகார்கள் பெறுவது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

இது தவிர தினமும் பார்வையாளர்கள் அதிகாரிகள் முதல் மேயர் வரை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கும் நடைமுறையும் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 2023 - 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்தார். அந்தத் திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. வட சென்னை பகுதிகளில் வளர்ச்சி பணிகளில் அதிக கவனம் செலுத்த மாநகராட்சி இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதற்கட்டமாக "மக்களைத் தேடி மேயர்" திட்டத்தின் கீழ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மே 3-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
வடக்கு வட்டாரத்தில் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக அளிக்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டார அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாக பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications