நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு... சென்னை இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை: நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் தென்னரசு (29). இவர், அதே பகுதியில் உள்ள ‘பீரோ' விற்பனை நிறுவனத்தில் வேலை செய்தபோது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் பெண் ஒருவரைக் காதலித்துள்ளார்.
பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. விரைவில் திருமணம் நடத்தவும் பெரியோர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், ஆவடியில் உள்ள தனது சகோதரன் வீட்டுக்கு தனது வருங்கால மனைவியை அழைத்துச் சென்ற தென்னரசு, அங்கு அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இப்படியாக இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
பின்னர், திடீரென ஒருநாள் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் தென்னரசு. பெரியவர்கள் பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, அயனாவரம் போலீசில் புகார் அளித்தார் அப்பெண். அதன்பேரில், தென்னரசு மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசதீஷ், ‘தென்னரசுக்கு எதிராக பலாத்கார குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை. ஆனால், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.