கணவர் வெட்டியதால் துண்டான ஆந்திரப் பெண்ணின் கையை மீண்டும் இணைத்த சென்னை டாக்டர்கள்!
சென்னை: குடும்பத்தகராறில் கணவர் வெட்டியதால், துண்டான ஆந்திர பெண்ணின் கையை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் இணைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கூடூர், தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டையா. இவரது மனைவி ராஜேஸ்வரி (35). கடந்த 17ம் தேதி கொண்டையாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கோபத்தில் மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார் கொண்டையா. அதனைத் தடுக்க முற்பட்ட போது, ராஜேஸ்வரியின் இடது கையில் வெட்டு விழுந்து, அவரது மணிக்கட்டு துண்டானது.
முதற்கட்ட சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராஜேஸ்வரி. அங்கு அவருக்கு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர்.
சுமார் ஆறு மணி நேரம் போராடி, துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை மருத்துவர்கள் மீண்டும் ராஜேஸ்வரியின் கையுடன் இணைத்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை, டீன் ஐசக் மோசஸ் கூறுகையில், "இன்னும் இரண்டு மாதங்களில், ராஜேஸ்வரி பழைய மாதிரி வேலை செய்யலாம். ஸ்டான்லி மருத்துவமனையில், 30 ஆண்டுகளாக, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு செயல்படுகிறது.
சிறந்த நிபுணர்கள், தேவையான வசதிகள் இங்கு இருப்பதால், சிக்கலான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்ய முடிகிறது. துண்டித்த கை, விரல்களை எவ்வளவு நேரத்தில், எப்படி சுத்தமாக கொண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம். துண்டிக்கப்பட்ட, 6 மணி நேரத்துக்குள் வந்தால் முழு வெற்றி கிடைக்கும்" என்றார்.
தற்போது ராஜேஸ்வரி நலமாக உள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த ராஜேஸ்வரி தனது மணிக்கட்டு மீண்டும் கையுடன் இணைந்திருந்ததைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.