திருமுருகன் காந்தியை ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி
Recommended Video

சென்னை: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2017ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் திருமுருகன் காந்தி பேசுகையில், "பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போராட்டத்தைபோல இங்கும் நடைபெறும்" என்று திருமுருகன் காந்தி கூறியதாக குற்றம்சாட்டிய போலீசார், திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (Unlawful Activities Prevention Act) வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் துரைமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திருமுருகன் காந்தி தரப்பிலிருந்து, முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் திருமுருகன் காந்தி பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்த நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி சிறையில் இருந்துள்ளார். குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த ஒருவரை பொதுக்கூட்டத்தில் பேசியதாக குறிப்பிட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் அவர் மீது காவல்துறையில் போட்டு உள்ளது. இதன் மூலம் இது ஒரு பொய் வழக்கு என்பது நிரூபணம் ஆகிறது என்று வாதிடப்பட்டது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ள வழக்குகளை எல்லாம் இப்போது திருமுருகன் காந்தி மீது பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாகவும், மூன்று வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திருமுருகன் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதி ரோசிலின் துரை குறுக்கிட்டு, "என்ற அடிப்படையில் திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போடப்பட்டது. தவறான தேதியை குறிப்பிட்டு, எப்படி நீங்கள் வழக்கு பதிவு செய்தீர்கள்" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
ஆனால் காவல்துறை தரப்பிலோ, நாங்கள் தேதியை தவறாக குறிப்பிட்டு விட்டோம் என்று தெரிவித்தனர். இதை கேட்ட நீதிபதி அதிருப்தியடைந்தார்.
எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 14ஆம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் இதுபற்றி கோர்ட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
திருமுருகன் காந்தி மீது மொத்தம் 34 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் இல்லாவிட்டாலும், பிற வழக்குகளுக்காக அவர் மறுபடியும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications