மருத்துவர்கள் போராட்டத்தை தடுக்க அரசு என்னதான் செய்தது - ஹைகோர்ட் கேள்வி
மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதம் அரசு மருத்துவர்கள் 17 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்கள் 15 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், போராட்டத்தை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வினவியது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து நேரில் ஆஜரான சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் தெரிவித்த கருத்துகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மருத்தவர்களிர் சில பிரிவினர் மட்டுமே இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எனினும் நோயாளிகளுக்கான சேவை பாதிக்காத வகையில் 24 மணி நேர மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சேவை பாதிப்பில்லை ஜனநாயக முறைப்படி சேவைத்துறையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராடக் கூடாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாகக் கூறிய ராதாகிருஷ்ணன் இது குறித்து மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். மற்றபடி சேவையை பொறுத்தமட்டில் அரசு கவனத்துடன் கையாள்வதாகவும் அறுவை சிகிச்சை, பிரசவ சிகிச்சை உள்பட அனைத்து சேவைகளும் அரசு மருத்துவமனைகளில் தங்குதடையின்றி கிடைப்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் செயலர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இடஒதுக்கீட்டு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.