ஜெ. மரணத்தில் மர்மம்.. டிராபிக் ராமசாமி மனுவை அவசர வழக்காக ஏற்க ஹைகோர்ட் மறுப்பு
ஜெயலலிதா மரணம் குறித்த டிராபிக் ராமசாமி மனுவை அவசர வழக்காக எடுக்க ஹைகோர்ட் மறுத்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக எடுக்க மறுத்த ஹைகோர்ட் விசராணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சேர்க்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியில் வந்தது. உண்மையில் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை. இந்த அறிக்கையை அவருடன் இருந்த சிலர் தயாரித்து போலி கையெழுத்து போட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி பொன்னையன், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகிகள் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோர் மீது ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஜெயலலிதாவின் சாவில் பல மர்மங்கள் உள்ளன. எனவே, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என்று கடந்த 6ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பினேன். அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஜெயலலிதாவின் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை கண்டுபிடிக்க அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஹைகோர்ட்டு பதிவுத்துறை ஏற்க மறுத்தது. இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பதை முடிவு செய்ய தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க மறுத்த ஹைகோர்ட் விசராணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.