ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு: டிராய், மத்திய தொலைத்தொடர்புத்துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிராய், மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிராய், மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்திற்கும் அதன் டவர் நிறுவனத்திற்கும் இடையேயான நிதி பிரச்சனையில் ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் கடந்த வாரம் மனு அளித்தது.

திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பு
ஏர்செல் நிறுவனத்தின் இந்த முடிவு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது

டிராய் அறிவிப்பு
ஏர்செல் நிறுவனம் கடும் கடன் சுமையில் உள்ளதால், அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த நேரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஏப்ரல் 15க்குள் வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாறிக் கொள்ளும்படி ஏர்செல் அறிவுறுத்தி இருந்தது.

ஹைகோர்ட் உத்தரவு
வாடிக்கையாளர்கள் மற்ற சேவையை பெறும் வரை, ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக்கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க டிராய், ஏர்செல் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு துறை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications