சென்னையில் இன்று இரவும் பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை: வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அவ்வப்போது மழை பொழிகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவிவந்த நிலையில், நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், சோழவரம், பூண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், காலை வேளையில் இதமான சூழல் நிலவியது.

சென்னை விமான நிலையத்தில் 35.6 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 1.5 மி.மீ மழையும் பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 22 மி.மீ மழையும், பூண்டியில் 3.40 மி.மீ பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: வெப்பச் சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 1 மணி நேரமாக கனமழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்றிரவும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications